காந்தி காலடி தேடி, கே. மோகன், 1 அக்டோபர் 2016


தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
(Tamil Heritage Trust) 
presents
காந்தி காலடி தேடி 
by
கே.மோகன்
on 1st October 2016, Saturday @ 5.30 PM at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
தமிழ் பாராம்பரியக் குழுவின் சார்பாக நடைபெறும் மாதாந்திர உரை நிகழ்ச்சியில், அக்டோபர் 2016 நிகழ்வாக, மகாத்மா காந்தி, தமிழகத்தில மேற்கொண்ட பயணங்கள் பற்றிய உரை இடம்பெறுகிறது. 

சிறப்பு நிகழ்வாக, மறுநாள் அக்டோபர் 2, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஏ.கே.செட்டியார் உருவாக்கிய காந்தி பற்றிய ஆவணப்படம் (80 நிமிடங்கள்), புதிதாக இணைக்கப்பட்டுள்ள தமிழ் பின்னணிக் குரலுடன் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக!

தலைப்பு குறித்து...

1896 தொடங்கி 1946 வரையிலான காலகட்டத்தில், மகாத்மா காந்தி தமிழகத்துக்கு 20 முறை வந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் பல்வேறு இடங்களில் பேசியிருக்கிறார். பல நபர்களைச் சந்தித்திருக்கிறார். 

காந்தி, தமிழகத்தில் மேற்கொண்ட பயணங்கள் குறித்து ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. 1969-ம் ஆண்டு, மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அ.இராமசாமி எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி” என்ற புத்தகம் வெளியானது. இராமசாமி, தினமணி இதழில் துணை ஆசிரியராக இருந்தவர். இரண்டரை ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர், தமிழகத்தில் காந்தி பேசிய நிகழ்ச்சிகள் குறித்த பத்திரிக்கைச் செய்திகள், டைரிக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அந்நூலை உருவாக்கியிருந்தார்.

சென்னை, காந்தி கல்வி நிலையத்தின் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழகத்தில் காந்தி எங்கெல்லாம் பயணம் மேற்கொண்டாரோ அங்கெல்லாம் நாமும் சென்று பார்க்கவேண்டும் என்று ஒரு கருத்தை முன்வைக்க, 7 ஆர்வலர்கள் முன்வந்தனர். அதில் மோகனும் ஒருவர். ஜூன் 2010-ல் மதுரை காந்தி அருங்காட்சியகத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி, 17 நாட்களில் ஏறக்குறைய 300 கிமீ பயணம் செய்து, காந்தியின் காலடி தடத்தை தேடிச் சென்றார்கள். 

காந்தி திறந்து வைத்த கட்டிடங்கள், அவர் தங்கிய வீடுகள், அவரது வருகையின்போது அவரை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் காந்தி குறித்த நினைவுகளையும் சேகரித்தார்கள். காந்தியின் காலடி தேடிச் சென்ற இந்த சுவராசியமான பயணம் பற்றிய விவரங்களை கே.மோகன் வழங்குவார்.

பேச்சாளர் குறித்து...

கே. மோகன் பிறந்து, வளர்ந்தது ஸ்ரீரங்கத்தில். மதுரை  மஜுரா கல்லூரியில் வேதியியலில் இளநிலைப் பட்டத்தை முடித்தவர்,அதைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டத்தை விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லூரியிலும் பெற்றார். சென்னை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், அதே நிர்வாகத்தின்கீழ் தங்கசாலைப் பகுதியில் இயங்கும் குஜராத்தி பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்றபின், காந்தி கல்வி நிலையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி தற்போது காந்தி கல்வி நிலையத்தின் தலைவராக இருக்கிறார்.

மகாத்மா காந்தி மோகனுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் டி.டி.திருமலை என்னும் சுதந்திரப் போராட்ட வீரர். ‘சர்வோதயம் மலர்கிறது’ பத்திரிகையில் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து மோகன் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். காந்தியையும், காந்தீயத்தையும் பள்ளிக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவது, மாணவர்களுக்கு மத்தியில் காந்தீய சிந்தனைகளை பரப்புவது போன்ற பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 


RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
​T.​
Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video